Tuesday, December 18, 2012

திருப்பாவை பாடல் 4 - திருவெம்பாவை பாடல் 4

திருப்பாவை பாடல் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.



பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே!
நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு
சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே.
கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே
சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின்
நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய
பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப்
போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல்
இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும்
அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து
புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக!
அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன்
வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா
நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை
மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய
தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில்,
அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக,
"ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள்.
ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே
அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும்.
இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க
பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல!
எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா"
என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம்
தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

திருவெம்பாவை பாடல் 4


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.



பொருள்: ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற
பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப்
பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய
பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல்
பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும்
வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ,
""அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள்
எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும்.
அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம்.


நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின்
பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி
உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை
எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து
வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்.
நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை
என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.

விளக்கம்: இறைவனை அடைய "நான் முந்தி, நீ முந்தி என
போட்டி போட வேண்டும். அதை விட்டுவிட்டு, "அவன் என்ன
செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போலவே
உண்டியலில் லட்சம் ரூபாய் போட்டால் கடவுளை அடைந்து
விடலாமா?இவனைப் போல் தியானத்தால் அடைந்து
விடலாமா? என்று யோசனை செய்து கொண்டிருப்பதால்
எந்தப் பலனுமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித்
தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய
முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

No comments:

Post a Comment