Tuesday, September 11, 2012

உடும்பாக வந்த உமாமகேஸ்வரன்

உடும்பாக வந்த உமாமகேஸ்வரன் 





காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது
திருமாகறல். இங்குள்ள திருமாகறலீஸ்வரர் கோவில்
பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.


                                                            அதிசிய பலாமரம் 



பிரம்மர் தனக்கு ஏற்ப்பட்ட தோஷத்திற்காக ஒவ்வொரு
சிவ தலமாக சென்று பூஜை செய்த போது இங்கும் வந்து
பூஜை செய்தார். பின்னர் புறப்படும் முன்பு ஆண்டு முழுவதும்
காய்க்கும் அதிசயப் பலாமரம் ஒன்றை நட்டார். அந்த பலாமரம்
நாள்தோறும் ஒரு பழம் வீதம் கொடுத்து வந்தது. அதன்
சுவையும் பன்மடங்கு அதிகமாக இருந்தது.


அந்த பகுதியை ஆண்ட ராஜேந்திர சோழன் இந்த அதிசய
பலாமரத்தை கண்டு வியந்தான். பின்னர் அந்த ஊரில் இருந்து
தினமும் ஒருவர் தலைச்சுமையாக பலாப்பழத்தை எடுத்து வந்து
சிதம்பரம் நடாராஜர் கோவிலில் சேர்க்க வேண்டும் என்று
உத்தரவிட்டான். நடராஜருக்கு இந்த பழத்தை மதிய வேலையில்
நெய்வேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம்.


மரத்தை எரித்த சிறுவன் 



ஒருநாள் சிவ பக்த அந்தன சிறுவன் முறை வந்தது. இந்த மரத்தில்
இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன்,
இதற்காக வேலைக்காரர்களை நியமிக்கலாமே என்று அந்த சிறுவன்
எண்ணினான். பின்னர் இந்த மரம் இருப்பதால் தானே மக்களுக்கு
துன்பம் என்று நினைத்த சிறுவன், யாருக்கும் தெரியாமல் அந்த
பலாமரத்தை எரித்து விட்டான்.


மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை.. உடனடியாக
சிறுவன் அழைத்து விசாரிக்கப்பட்டான். உண்மை தெரியவந்ததும்
அந்த சிறுவனை கண்ணை கட்டி நாடு கடத்த மன்னன் உத்தரிவிட்டான்.
தண்டனை நிறைவேற்றப்படுகிறதா என்று தானே சென்று கவனித்தான்.
ஊர் எல்லையில் இருந்து மன்னன் சில பரிவாரங்களுடன் திரும்பிக்
கொண்டிருந்தான். 

உடும்பாக சிவபெருமான்




                       
                           
அப்போது ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க
காவலாளிகளை மன்னன் ஏவினான். ஆனால் அந்த உடும்பி அருகில்
இருந்த புற்றுக்குள் சென்று விட்டது. இதையடுத்து காவலர்கள் தாங்கள்
வைத்திருந்த ஆயுதங்களால் புற்றை தகர்க்க முயன்றனர். அப்போது
புற்றுக்குள் தென்பட்ட உடும்பின் வாலில், ஒரு ஆயுதம் பட்டு ரத்தம்
பீரிட்டு வந்தது, ஆறாக ஓடியது. இதனை பார்த்ததும் மன்னன் மயங்கி
விழுந்தான். மயக்கம் தெளிந்து மன்னன் எழுந்தபோது ஒரு அசரீரி கேட்டது.
' சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும், அந்த இடத்தில் ஓர் சிவாலயம்
கட்டி வழிபாடு செயும்படியும் ஆணையிட்டார். மன்னரும் அதன் படியே
செய்தான். இன்றும் இந்த கோவிலில் உடும்பின் வால் அளவில் உள்ள
லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தலத்தில் உள்ள இறைவனுக்கு அடைக்கலம் காத நாதர்,
மகம் வாழ்வித்தவர், உடும்பீசர் , பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார்,
நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்துகாத்தவர், அகத்தீஸ்வரர்
ஆகிய பெயர்களும் உண்டு. இந்த தலத்தில் சிவபெருமான் சுயம்புவாக
அருள் பாலிக்கிறார். மூலவர் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி)
அமைப்பில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண் பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.


உடும்பாய் பிடித்தேன் உன்பாதம் , இடும்பை களைவாய் ஈசனே 

No comments:

Post a Comment